Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

உத்திரமேரூர் அருகே கோழியாளம் கிராமத்தில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசரின் அரிய சிலை கண்டுபிடிப்பு

உத்திரமேரூர் கோழியாளம் அருகே கண்டெடுக்கப்பட்ட லகுலீசர் சிலை.

உத்திரமேரூர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கோழியாளம் கிராமத்தில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பல்லவர் காலத்தைச் சேர்ந்தசைவ சமய பிரிவுகளில் ஒன்றானபாசுபதத்தை நிறுவிய லகுலீசரின்அரிய சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்திரமேரூர் வரலாற்று ஆய்வுமையத் தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து இந்த கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்தச் சிலையை கண்டறிந்தனர். இதுகுறித்து கொற்றவை ஆதன் கூறியதாவது:

லகுலம் என்றால் தடி, ஈசம் என்றால் ஈஸ்வரன். தடியைக் கொண்டுசைவ சமயத்தை பரப்ப சிவபெருமான் மனித உருவில் 28-வது அவதாரமாக உருவெடுத்தார் என்று கூறப்படுகிறது. அவரே லகுலீசன் என்று அழைக்கப்படுகிறார். சைவ சமயத்தின் முக்கிய பிரிவான பாசுபதத்தில் இருந்து லகுலீச பாசுபதம் தோன்றியது.

கி.பி. 2-ம் நூற்றாண்டில் குஜராத்மாநிலத்தில் வதோதரா மாவட்டத்தில் காரோஹன் என்னும் இடத்தில்தோன்றி, தமிழகத்தில் மூன்றாம்நூற்றாண்டுக்கு பிறகு லகுலீச பாசுபதம் வேர் விடத் தொடங்கியது. சங்க காலத்திலேயே இதன் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இதைப்பின்பற்றுபவர்கள் விபூதியை உடல்முழுவதும் பூசிக் கொண்டு சாம்பலில் நடனமாடி சாம்பலில் படுத்துறங்கி மாலைகளை அணிந்து கொண்டு லகுலீச பாசுபதம் சார்ந்த கோயில்களில் மட்டுமே இரவில் தங்குவார்கள்.

பல்லவர் காலத்தில் உச்சத்தில்இருந்த இந்த லகுலீச பாசுபதம் பின்னர் படிப்படியாக வலுவிழக்க தொடங்கியது. சோழர் கால அரசவைகளில் இவர்கள் ராஜகுருவாக செல்வாக்குடன் இருந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 20 லகுலீசர்உருவங்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்திலும் இதுதான் முதல் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் கண்டறிந்த இந்த சிலையானது 95 செ.மீ. உயரமும், 65 செ.மீ. அகலமும் கொண்டு ஆடையின்றி சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதன் தலையில் ஜடா பாரமும், இரு காதுகளில் அழகிய குண்டலங்களும், கழுத்தில் ஒட்டிய அணிகலான சவடியும், வலக்கையில் தண்டும், இடக்கையை தொடை மீது வைத்த நிலையிலும், தொப்புளின் கீழ்ஆண்குறி அருகே மலர் வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. இடது தோள்பட்டை மேல் படம் எடுத்த நிலையில் நாகத்தின் உருவம் இடம் பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டின் அஸ்திவாரம் தோண்டும்போது கிடைத்த இந்த சிலை, கோழியாளம் பேருந்து நிறுத்தம் அருகே பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் பூமியில் இருந்ததால் சற்று சிதைந்த நிலையில் உள்ளது.

இதை ஊர் மக்கள் சிலர் அம்புரீஸ்வரர் என்று அழைக்கின்றனர். இது லகுலீசர் சிலையாகும். இதைதொல்லியல் அறிஞர்கள் மங்கைவீரராகவன், சுகவன முருகன்ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதை தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் விருப்பமாகும்.

லகுலீசரின் சிலை, கோழியாளம் பேருந்து நிறுத்தம் அருகே பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x