Last Updated : 23 Jul, 2021 06:39 PM

 

Published : 23 Jul 2021 06:39 PM
Last Updated : 23 Jul 2021 06:39 PM

கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே ஆன்லைனில் தேர்வு; புதுச்சேரி பல்கலை. அறிவிப்பு

புதுச்சேரி

கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பில் இதர கல்வி ஆண்டுகளுக்கு செமஸ்டர் தேர்வில்லை. அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் தரப்படும் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் தொடர்பாக தெளிவான நடைமுறை வெளியிடப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழகத்துக்கு கல்வியமைச்சர் நமச்சிவாயம் கடிதம் எழுதினார். இதையடுத்து கடந்த 19ம் தேதிமுதல் அனைத்து தியரி தேர்வுகளும் ஆன்லைன் முறை மூலம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. அதன்படி இறுதியாண்டு தேர்வுகள் பலதுறைகளில் தொடங்கியது.

கல்லூரி முதல்வர்கள் வினாத்தாள்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள், மாணவர்கள் ஏ4 அளவு வெள்ளை காகிதத்தில் கருப்பு மை கொண்டு எழுதலாம். 3 மணி நேர காலத்திற்குப் பிறகு மாணவர்கள் அவர்கள் எழுதிய விடைத்தாளை ஸ்கேன் செய்து கல்லூரி முதல்வருக்கு 30 நிமிடங்களுக்குள் அனுப்பலாம்.

கல்லூரி முதல்வர்கள் விடைத்தாள்களை நகலெடுத்துமுதல்பக்கத்தில் கல்லூரி முத்திரையை இட்டு அதே நாளில் பல்கலைக்கழகத்துக்கு விடைத்தாளை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர், அனைத்துக்கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு:

"இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். பட்டப்படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பட்டமேற்படிப்பில் முதலாண்டு செமஸ்டர் வரும் ஜூலை 27 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. அவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அவை அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படும். அதேநேரத்தில் இம்மாணவர்கள் தேர்வுகளுக்கு பதிவு செய்யவேண்டும். அதேபோல் தேர்வுக்கட்டணம் உட்பட அனைத்து விஷயங்களையும் ஏற்கெனவே தரப்பட்டுள்ள அட்டவணைப்படி பின்பற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தரப்பில் விசாரித்தபோது, இவ்வுத்தரவானது முழுக்க கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும், பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கு பொருந்தாது. யூஜிசி வழிகாட்டுதல் அடிப்படையில் இவ்வுத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x