Published : 09 Jun 2014 11:05 AM
Last Updated : 09 Jun 2014 11:05 AM

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தமிழக மீனவர்கள் 82 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து ராமேசுவரம் மற்றும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 82 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

இதில் 10 விசைப்படகுகளில் இருந்த 50 மீனவர்கள் தலைமன்னார் கடற்படைத்தளத்துக்கும், 8 விசைப்படகுகளில் இருந்த 32 மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படைத் தளத்துக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இலங்கை நீதிமன்றம் விடுமுறை என்பதால் மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மற்றும் பாம்பனில் தனித்தனியாக விசைப்படகு மீனவர் பிரதிநிதிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளரிடம் ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி தேவதாஸ் கூறும்போது, “இலங்கை அரசு முன்னர் மீனவர்களை விடுதலை செய்யும்போது விசைப்படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட தளவாடங்களுடன் மீனவர்களை விடுதலை செய்யும். ஆனால் தற்போது விசைப்படகுகளையும் மீன்பிடித் தளவாடங்களையும் கைப்பற்றிக் கொண்டு மீனவர்களை மட்டும் விடுவித்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது, மீனவர்களை விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் ஈடுபடுவார்கள்” என்றார்.

இந்தியத் தூதரகம் பேச்சு

தமிழக மீனவர்கள் 73 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது தொடர்பாக, இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் இலங்கை அதிகாரிகளுடன் பேசி வருகிறது.

“இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை அதிகாரிகளுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் பேசி வருகின்றனர்” என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x