Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

சாகர்மாலா திட்டத்தில் பாதகமான அம்சங்கள்; மீனவர்கள் இடையூறின்றி மீன்பிடிக்க நடவடிக்கை: மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி

நாகர்கோவில்

சாகர்மாலா திட்டத்தில் பாதகமான அம்சங்கள் உள்ளதால் அத்திட்டத்தை தடுத்து, மீனவர்கள் இடையூறின்றி மீன்பிடிக்க உரிய வழிமுறைகள் வகுக்கப்படும் என கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் நேற்று அவர் ஆய்வு மேற்கொண்டார். சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம், மணக்குடி, ராஜாக்க மங்கலம் துறை, அழிக்கால், கடியபட்டணம், பெரியவிளை, மண்டைக்காடு, குளச்சல், வாணியக்குடி, தேங்காய் பட்டணம் ஆகிய கடலோரப் பகுதிகளை பார்வையிட்டு, மீனவர் களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்க அளித்த பேட்டி:

தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளன? என்பதை கண்டறிந்து அவற்றை களைவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சின்னமுட்டம் மீனவர்கள் சாலைகளை அகலமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, நிதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துறைமுகத்தின் இரு புறங்களிலும் படகுகளை நிறுத்துவதற்காக ரூ.40 கோடி மதிப்பில் திட்டவரைவு தயாரித்து ஒப்புதல் பெற்று, விரைவில் பணிகள் நடைபெறும்.

கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்டு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாகர்மாலா திட்டத்தில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்கு பாதகமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

காற்றின் வேகத்தால் படகுகள் திசை மாறிச் செல்லும் பட்சத்தில் மீனவர்களுக்கு அபராதமும் விதிக்கும் நடைமுறை உள்ளது. சாகர்மாலா திட்டத்தை தமிழக அரசு தடுத்து, மீனவர்கள் கடலில் இடையூறு இல்லாமல் மீன்பிடிக்க வழிமுறை மேற்கொள்ளப்படும். மீனவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

பேரிடர் காலங்களில் மீனவர் கள் கரை திரும்புவதற்கான நடவடிக்கை தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது விதிமுறைகளை மீறுவதால் சில பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மீனவர் நலத்துறை ஆணையர் கருணாகரன், கூடுதல் ஆணையர் சஜ்ஜன்சிங் சவான், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x