Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM
சென்னையில் கடந்த ஓராண்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தமிழகத்திலேயே கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் சென்னையில்தான் அதிகம் ஏற்பட்டுள்ளது. இந்த பேரிடரை வருங்கால சந்ததியினருக்கு தெரிவிக்கும் வகையில், மாநகராட்சிசார்பில் கரோனா நினைவிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு அனைத்து வகையான பொருட்களையும் மலிவு விலையில் விற்பதற்காக அம்மா வாரச்சந்தை தொடங்க திட்டமிடப்பட்டது. அதற்காக மின்ட் பாலத்தின் கீழ் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டது.
அந்த இடத்தில் கரோனா நினைவிடத்துடன் கூடிய பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நினைவிடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையர் டி.சினேகா ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “நினைவிடத்துடன் கூடிய பூங்கா அமைக்கவிருப்பது தொடர்பாகவும், அந்தபூங்காவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்தும் விரைவில் ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. ஒரு வாரத்துக்குள் இத்திட்டம்முழு வடிவம் பெற வாய்ப்புள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT