

புதுச்சேரியில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 17) வெளியிட்ட தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 6,395 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில்- 70, காரைக்காலில்-19, ஏனாமில்-2, மாஹேவில்- 3 பேர் என மொத்தம் 94 (1.47 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 230 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 940 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், மாஹேவைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,776 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது. இதனிடையே புதிதாக 171 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 657 (97.54 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 14 லட்சத்து 19 ஆயிரத்து 519 பேருக்குப் பரிசோதனை செய்ததில் 12 லட்சத்து 12 ஆயிரத்து 395 பேருக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும், 6 லட்சத்து 31 ஆயிரத்து 559 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 குழந்தைகளுக்கு கரோனா:
புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 குழந்தைகளுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், 11 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 3 குழந்தைகளும் அடங்குவர்.
இதேபோல, கரோனா உறுதி செய்யப்பட்ட தாயுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பச்சிளங் குழந்தைகளும் உள்ளனர். மேலும், கரோனா சந்தேகத்துடன் 3 வயதுக் குழந்தை ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி பிரத்யேக கரோனா குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.