Published : 17 Jul 2021 03:16 AM
Last Updated : 17 Jul 2021 03:16 AM
வாணியம்பாடி நியூடவுன் பகுதி யில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற கூட்ட தொடர் முடிவதற்குள் தெரிவிக்கப்படும் என வேலூர் எம்பி கதிர்ஆனந்த் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் வி.ஏ.கரீம் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அ.செ.வில்வநாதன் வரவேற்றார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் தலைமை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, வேலூர் எம்பி அலுவல கத்தை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, பொது மக்களிடம் இருந்து எம்பி., கதிர்ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் மனுக்களை பெற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் கூறும் போது, "வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆம்பூர் என்பதால் இங்கு ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எம்பி அலுவலகம் தினசரி திறக்கப்படும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத் துக்கு 2 அல்லது 3 நாட்கள் நானே நேரில் வந்து பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கவுள்ளேன்.
இது தவிர பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப் படும். கிராமப்புறங்களுக்கு அரசு அதிகாரிகளை அழைத்துச்சென்று அங்கேயே அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஆம்பூர் ரெட்டிதோப்புப்பகுதி யில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப் பட்டுள்ளது. எனவே, ஆம்பூர் ராஜீவ்காந்தி சிலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.150 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப் படும் என திமுக தேர்தல் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்றாம்பள்ளி அடுத்த மல்லகுண்டா பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிப்காட் தொழிற் சாலை அமைக்க ஏற்கெனவே இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோரிடம் வேலூர் எம்பி என்ற முறையில் நான் கோரிக்கையும் விடுத்துள்ளேன்.
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன. அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க இடம் கையகப்படுத்த வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சுரங்கப்பாதை அமைக்க வாணியம்பாடி நகராட்சி மற்றும் ரயில்வே துறை ஒத்துழைப்பு தேவைப்படு கிறது. இதற்காக, அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு நாடாளுமன்ற கூட்ட தொடர் முடிவதற்குள் தெரிவிக்கப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜ் (ஜோலார்பேட்டை), அமலுவிஜயன் (குடியாத்தம்) மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT