Published : 15 Jul 2021 06:42 AM
Last Updated : 15 Jul 2021 06:42 AM

புதுவையில் வீடுதேடி சென்று கரோனா தடுப்பூசி: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வீடு தேடிச் சென்று கரோனா தடுப்பூசி போடும் திட்டம் புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. இதற்கான வாகனத்தை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு கரோனாவைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 100 சதவீதம் கரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை உருவாக்கும் வகையில் பொதுமக்கள் தடுப்பூசி போட அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ‘தடுப்பூசி திருவிழா’ என்ற பெயரில் 3 முறை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

104 இலவச எண்

இந்நிலையில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றோர், படுத்த படுக்கையாக இருப்பவர்கள், முடக்குவாதம் வந்து நடக்க முடியாமல் இருப்பவர்கள் 104 என்ற இலவசதொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் அவர்கள் வீட்டுக்கே
சென்று இலவசமாக கரோனாதடுப்பூசி போடும் திட்டத்தை புதுச்சேரி அரசு தொடங்கியுள்ளது.

இதற்கான கரோனா தடுப்பூசி வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கரோனா தடுப்பூசி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சுகாதாரத் துறை செயலர் அருண், இயக்குநர் மோகன்
குமார், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு, கரோனா நோடல் அதிகாரி ரமேஷ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

மதுபானம் விலை 20% உயர்வு

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில், "புதுச்சேரியில் விற்கப்படும் இந்திய தயாரிப்பு அல்லது வெளிநாட்டு தயாரிப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் விலை உயர்வு ஜூலை 15 (இன்று) முதல் அமலுக்கு வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார். அரசிதழிலும் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

அரசு வட்டாரங்கள் கூறும் போது, "புதுவை நிதிநிலை திருப்திகரமாக இல்லை. அரசுக்கு வருவாயை உயர்த்த, மதுபானங்களின் அதிகபட்ச சில்லறைவிலையை 20% (எம்ஆர்பியை விட) உடனடியாக உயர்த்துகிறோம்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x