Published : 14 Jul 2021 12:19 PM
Last Updated : 14 Jul 2021 12:19 PM

நீட் தேர்வு வேண்டாம் என்றே பெரும்பாலான கருத்துகள் வந்துள்ளன: நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி

சென்னை

''நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதகங்களே அதிகம் எனப் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து அம்சங்களையும் அறிக்கையில் கொடுத்துள்ளோம். இத்துடன் எங்கள் பணி முடிந்தது'' என ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 33 நாளில் ஆய்வை முடித்து இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

முதல்வரைச் சந்தித்தபின் நீதிபதி ஏ.கே.ராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“165 பக்கங்கள் கொண்ட முழு அறிக்கையை அளித்துவிட்டோம். அதில் உள்ள சரத்துகள் பற்றி நான் உங்களிடம் சொல்லக் கூடாது. அதை நீங்கள் அரசிடம் கேட்டுக்கொள்ளலாம். நான் எப்போதும் சொல்வது 2006-ல் கொண்டுவந்த சட்டம், சரியானபடி வாதாடினால் இன்றும் செல்லுபடியாகும் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.

முதல்வரிடம் அறிக்கையை அளித்தோம். முக்கியமான சரத்துகளை அவரிடம் தனியாக அளித்தோம். அவர் பார்த்துக்கொண்டார். மற்றபடி அதுகுறித்து நான் எதையும் சொல்லக் கூடாது. 86,000க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கூறியுள்ளனர். இதுகுறித்து ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.

முதல் தலைமுறை மாணவர்கள் படிப்பது குறைந்துள்ளது என்பது குறித்துக் கேட்கிறீர்கள். அது குறித்தெல்லாம் அறிக்கையில் உள்ளது. அறிக்கையில் உள்ள விவரத்தை நான் வெளியில் சொல்லக் கூடாது. 7.5% இட ஒதுக்கீடு குறித்த விவரங்கள் எதையும் நாங்கள் குறிப்பிடவில்லை. அது எங்கள் ஆய்வில் இல்லை. கருத்துகள் அதிக அளவில் வந்தன. அது போதுமானதாக இருந்தது.

அனைத்து அம்சங்களுடன் அறிக்கை தயாரித்து அளித்துள்ளோம். எங்களது பணிக்காலம் இத்துடன் முடிவடைந்துவிட்டது. ஒரு மாத காலத்தில் அறிக்கை அளிக்கச் சொன்னார்கள், அளித்துவிட்டோம். அத்துடன் எங்கள் வேலை முடிந்துவிட்டது. குழுவின் பணிக்காலமும் முடிந்துவிட்டது.

நீட் தேர்வு ஏற்படுத்திய தாக்கம் குறித்து மட்டுமே எங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கச் சொன்னார்கள். எங்களுக்குக் கொடுத்த பணியைச் சரியாக முடித்துவிட்டோம், அதைத் தாண்டி அரசுக்கு எதுவும் நாங்கள் யோசனை சொல்ல முடியாது.

இது பெரும்பான்மை கருத்து என்கிற வாக்குகள் போன்ற ஆய்வு அல்ல. நீட் தேர்வால் என்ன பாதிப்பு, தேர்வு நடத்துவது, நடத்தக் கூடாது, இந்த ஆண்டு மட்டும் நடத்தலாம் எனப் பல்வேறு கருத்துகள் வந்தன. இதைத் தவிர உளவியல், பொருளாதாரம், சட்டப் பிரச்சினை எனப் பல கருத்துகள் வந்துள்ளன.

நிறைய விஷயங்களை நாங்கள் அரசுக்குப் பரிந்துரையாக அளித்துள்ளோம். மிகுந்த திருப்தியாக உள்ளது. இனி அரசு ஆலோசித்து அவர்கள் முடிவெடுப்பார்கள்”.

இவ்வாறு நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x