Last Updated : 12 Jul, 2021 02:22 PM

 

Published : 12 Jul 2021 02:22 PM
Last Updated : 12 Jul 2021 02:22 PM

மூன்று மாதங்களுக்கு பிறகு புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ்கள் இயக்கம்

கரோனா ஊரடங்கு தளர்வால் மூன்று மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இருந்து தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. வெளியூர் செல்ல முன்பதிவும் தொடங்கியது.

கரோனா 2வது அலை பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் தமிழகம், புதுவையில் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டது. தமிழகத்தில் முழு ஊரடங்கும், புதுவையில் தளர்வுகளுடன் ஊரடங்கும் அமலில் இருந்தது. அதேநேரத்தில் தமிழகம், புதுவையில் பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கான போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டது.

கரோனா 2வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் தமிழகம், புதுவையில் ஊரடங்கில் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. புதுவையில் கடந்த மே மாதமே பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியது.

ஆனால் புதுவையில் அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. தனியார் பஸ்கள் இயக்கப் படவில்லை. தமிழகத்தில் பஸ்களை இயக்க அனுமதி வழங்கவில்லை. மாநிலங்களுக்கு இடையிலான பஸ் .போக்குவரத்தும் தொடங்கவில்லை. பின்னர், புதுவைக்குள் இயங்கும் தனியார் பஸ்கள் மட்டும் மாநில எல்லை வரை படிப்படியாக இயங்க தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த முறை அறிவிக்கப்பட்ட தளர்வின்போது மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. புதுவை மாநிலம் என்பதால் தமிழக அரசு பஸ்கள் புதுவைக்குள் வர அனுமதிக்கப்படவில்லை.

இதனால் தமிழக அரசு பஸ்கள் புதுவை மாநில 4 எல்லைகளிலும் பயணிகளை இறக்கியும், அங்கிருந்து பயணிகளை ஏற்றியும் சென்றது. புதுவையை பொறுத்தவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுவையின் கிராமப் பகுதியிலிருந்தும் நகர பகுதிக்கு நாள்தோறும் அரசு, தனியார் நிறுவனம், வர்த்தக நிறுவனங்களில் பணிக்கு வருவார்கள்.

இவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வரும் சூழ்நிலை நிலவியது. மேலும் கிராமப்பகுதி வழித்தடங்களில் தனியார் பஸ்கள் முழுமையாக இயங்காததால் புதுவைக்கு வந்து செல்ல மக்கள் அவதிக்குள்ளாகினர்.இதையடுத்து தமிழக பஸ்களை புதுவைக்கு இயக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வில் புதுவைக்கு தமிழக அரசு பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பஸ்கள் புதுவைக்கு இன்று முதல் வர தொடங்கியது. புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் இன்று இயங்கியது.

சென்னை, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை, செஞ்சி, நாகைப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதேபோல புதுவையிலிருந்து தமிழக பகுதிக்கு செல்லும் பஸ்களும் இயங்க தொடங்கியது. புதுவையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் தமிழக அரசின் விரைவு பஸ்களுக்கு முன்பதிவும் தொடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x