Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக்கில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்: வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நம்பிக்கை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என அவரது வழக்கறிஞர் என்.ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில்சசிகலா இருந்தபோது, கடந்த 2017 செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.அதில் பொதுச் செயலாளர், துணைபொதுச் செயலாளர் பதவியில் இருந்துசசிகலா, டிடிவி தினகரன் நீக்கப்பட்டு,கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சசிகலா, தினகரன் ஆகியோர் சென்னை பெருநகர உரிமையியல் 4-வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையில், அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால், இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, மதுசூதனன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த கீழமை நீதிமன்றம், அதிமுக நிர்வாகிகளின் மனுவுக்கு சசிகலா தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணை வரும் 20-ம்தேதி நடக்க உள்ள நிலையில், இதுபற்றி சசிகலா வழக்கறிஞர் என்.ராஜாசெந்தூர்பாண்டியன் கூறியதாவது:

கட்சியில் உள்ள உண்மையான தொண்டர்கள் பலர் சசிகலா பக்கம் உள்ளனர். சசிகலா தொடர்ந்து தொலைபேசியில் பேசி நலம் விசாரிப்பதால் தொண்டர்கள், கட்சி விசுவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் அதிமுகவில் திருப்புமுனை நிகழும். இந்த வழக்கில் சட்ட ரீதியாக போராடி நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x