Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM

ஜிகா வைரஸுக்காக அச்சப்படத் தேவையில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

ஜிகா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிவகங்கை அருகே பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர் நேற்று ஆய்வு செய்தார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 137 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா வார்டை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் தலைமையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக சுகாதார நிலையங்களை சீரமைக்கவில்லை. எனவே 15-வது நிதிக் குழு மானிய நிதி ரூ.4,619 கோடி மூலம் தமிழகத்தில் 10,839சுகாதார நிலையங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி தன்னிறைவு பெற்றதாக மாற்றப்படும்.

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிக்கு மகப்பேறு முடிந்து தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இதனால் அந்த வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை. வைரஸ்கள் உருமாறிக் கொண்டே இருப்பதால், பாதிப்பு தன்மை இன்னும் புரியாமல்தான் உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளுக்கும் புற்றுநோயை கண்டறிவதற்கான கருவிகளை அனுப்பி வருகிறோம். காஞ்சிபுரம் அண்ணா புற்று நோய் மருத்துவமனையை சர்வதேச தரத்தில் உயர்த்த திட்டம் தயாரித்து வருகிறோம்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 20லட்சம் பேர் மட்டும் மருத்துவமனைகளில் மருந்து வாங்குகின்றனர். ஆனால் இந்நோய்களால் ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

இதில் வீடு, வீடாகக் கணக்கெடுத்து நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே வந்து மாத்திரைகள் வழங்கப்படும். மேலும் நடமாடும் வாகனம் மூலம் முடக்குவாதம் பாதித்தோருக்கு பிசியோதெரபியும், சிறுநீரகம் பாதித்தோருக்கு டயாலிசிஸ் செய்யப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 5.5 லட்சம் இறப்பு என இருப்பது பாதியாகக் குறையும்.

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கிருந்து வருவோரை கண்காணித்த பிறகே தமிழகத்தில் அனுமதிக்கிறோம். மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிக்கான வாடகையில் முறைகேடு நடந்துள்ளது. அது குறித்த விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் அதில் தினமும் ரூ.30 லட்சம் வரை மிச்சப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x