Published : 10 Jul 2021 03:15 AM
Last Updated : 10 Jul 2021 03:15 AM

காரைக்கால் எல்லைப் பகுதிகளில் இறக்கிவிடுவதால் தமிழக அரசுப் பேருந்தில் வரும் பயணிகள் அவதி

காரைக்கால்

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், பொதுப் போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து முழுமையாக தொடங்கப்படவில்லை. இதனால் தமிழகம்- புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளையொட்டியுள்ள மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புவியியல் ரீதியாக புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், தமிழகத்தின் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கிடையே அமைந்துள்ளது. மருத்துவம், வேலை, வியாபாரம் என பல்வேறு காரணங்களுக்காக காரைக்கால் மக்கள் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்குச் செல்வதும், அங்குள்ளோர் காரைக்கால் பகுதிகளுக்குச் செல்வதும் அன்றாடம் நிகழும் வழக்கமான ஒன்று.

புதுச்சேரி அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படும் நிலையில், காரைக்கால் மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல பெரிதும் தமிழக அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.

மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில், நாகை, சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்டப் பகுதிகளுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் காரைக்கால் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், காரைக்கால் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால், தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட கடந்த 5-ம் தேதி முதல், தமிழக அரசுப் பேருந்துகளில் வரும் பயணிகள் காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிகளிலேயே இறக்கி விடப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து புதுச்சேரி அரசுப் பேருந்துகள் மூலம் காரைக்கால் பகுதிகளுக்குச் செல்கின்றனர். அதேபோல, காரைக்கால் பகுதியிலிருந்து வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் மாவட்ட எல்லைக்கு வந்து, பின்னர் தமிழக அரசுப் பேருந்துகள் மூலம் செல்கின்றனர். எல்லைப் பகுதிகளில் பேருந்து பயணிகளுக்கு எவ்வித வசதியும் இல்லாததால், பேருந்துக்காக வெட்டவெளியில் நீண்டநேரம் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால், அருகருகே உள்ள இரு மாநிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக அரசுப் பேருந்துகள் காரைக்கால் மாவட்டத்துக்குள் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கேற்ற வகையில் தேவையான நடவடிக்கைகளை புதுச்சேரி ஆட்சியாளர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x