Published : 09 Jul 2021 03:14 AM
Last Updated : 09 Jul 2021 03:14 AM

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆளுநரிடமும் மனு கொடுத்தனர்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விறகு அடுப்புகளுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், மாட்டு வண்டியில் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதைத் தொடர்ந்து திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, சுதா ராமகிருஷ்ணன், தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் ஆகியோர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து சென்னை ராயப்பேட்டையில் கையெழுத்து இயக்கமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x