Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM

மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் ஜூலை 15-ல் உண்ணாவிரதம்: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு

மேகேதாட்டுவில் அணை கட்டு வதைத் தடுக்க வலியுறுத்தி தஞ் சாவூரில் ஜூலை 15-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியது கண்டிக்கத்தக்கது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ள நிலையில், அணையின் நீர்மட்டமும் குறைந்துகொண்டே வருகிறது. இதனால், குறுவை பயிர்களை காப்பாற்ற முடியாததுடன், அடுத்து சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளையும் விவசாயிகளால் செய்ய முடியாத சூழல் உள்ளது.

காவிரி பிரச்சினை குறித்தும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரியும் மத்திய அமைச்சரிடம் தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கடிதம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது கூட்டாட்சி தத்துவ அடிப்படையிலான மரபுதான். ஆனால், காவிரியில் தண்ணீரை பெற்றுத் தரக்கூடிய உரிமையும், மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய பொறுப்பும் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய தலைவருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்காதது, விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆணைய தலைவரை சந்தித்து தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர முதல்வர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ராசிமணலில் அணைகட்டுவோம், மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து, தஞ்சாவூரில் ஜூலை 15-ம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம். இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x