Published : 08 Jul 2021 12:23 PM
Last Updated : 08 Jul 2021 12:23 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை எப்படி வழங்கப்பட்டது? - தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவியாக வழங்க ஒதுக்கப்பட்ட 133 கோடி ரூபாய் எப்படிப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 08) விசாரணைக்கு வந்தது.

அப்போது, கண் பார்வையற்றவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிவாரண உதவி வழங்கும் திட்டம் கண் பார்வையற்றவர்களுக்குப் பொருந்தாது என அரசு, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். கண் பார்வையற்றவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் கோரினார்.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை எனவும், அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க 133 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அரசு, அதில் 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும், மீதத் தொகையை நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வாதிட்டார்.

இதையடுத்து, அரசு ஒதுக்கீடு செய்த 133 கோடி ரூபாயில் மீதமுள்ள 73 கோடி ரூபாய் நிலை என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 133 கோடி ரூபாய் தொகை எப்படி விநியோகிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x