Published : 08 Jul 2021 03:13 AM
Last Updated : 08 Jul 2021 03:13 AM

கடலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் போலி கால்நடை மருத்துவர்கள்: ஆட்சியர் கடும் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் உள்ளபோலி கால்நடை மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. மீறி போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல். போலி நபர்களிடம், கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு இழப்பீடுகளுக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது.

சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் எனக்கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறு.

செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள், மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும்3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது. எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை பெற, அங்கீகரிக்கப்பட்ட (பதிவு பெற்ற) மருத்துவர்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும்.

போலி மருத்துவர்கள் குறித்த தகவலை, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநருக்கும்,அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்கலாம்.

போலி மருத்துவர்கள் கண்டறியப் பட்டால், முதன்முறை என்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால் ரூ.1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு என்று தெரிவிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x