Last Updated : 07 Jul, 2021 09:32 AM

 

Published : 07 Jul 2021 09:32 AM
Last Updated : 07 Jul 2021 09:32 AM

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு பராமரிக்கும் தன்னார்வ அமைப்பினர்

கோவை மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டுவரும் ஆதரவற்றோர் மீட்பு, பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்.

கோவை

கோவையில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு அவர்களை தன்னார்வ அமைப்பினர் பராமரித்து வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் ஆதரவற்றோர் மீட்பு, பராமரிப்பு மையத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர், கடந்த ஜூன் 10-ம் தேதி தொடங்கி வைத்தனர்.

இந்த மையம் மூலம் கோவை மாவட்டத்தில் சாலையோரம் வசிக்கும் மன நலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோரை அடையாளம் கண்டு அவர்களை மீட்கின்றனர். பின்னர், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு வழங்கி பராமரித்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து, மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் 'ஹெல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் கணேஷ் முத்து கூறியதாவது:

"கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் தற்போதுவரை ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இருந்த 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், 90 சதவீதம் பேர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள். மீட்கப்படுவோரை பராமரிக்க 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு முதலில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்கிறோம். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மீட்கப்படுபவர்களை மையத்துக்கு கொண்டுவர பிரத்யேக வாகனம் செயல்பட்டு வருகிறது.

மீட்கப்பட்டோருக்கான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள பாதுகாவலர்கள், சத்தான உணவு ஆகிய அடிப்படை வசதிகளுடன் மன நல மருத்துவர்களின் ஆலோசனை, யோகா பயிற்சி, உடற்பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

செவிலியர்கள், பராமரிப்பாளர்கள் என மொத்தம் 17 பேர் இந்த மையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, மாவட்ட சுகாதாரத்துறை ஆகியவை தேவையான மருத்துவ உதவியை வழங்கி வருகின்றன.

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் மையத்துக்கான கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையினர், காவல் துறையினர், பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் சாலையோரம் இருக்கும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு வருகிறோம்.

பொதுமக்கள் யாரேனும் தங்கள் பகுதியில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டோர் இருப்பதை அறிந்தால், 6374713771 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்".

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x