Published : 07 Jul 2021 03:14 AM
Last Updated : 07 Jul 2021 03:14 AM

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1,142 மனுக்களுக்கு தீர்வு

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1,142 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் பேரில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு கண்டு முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை 15 பேருக்கு வழங்கினர்.

மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி 227 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 20 பேருக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி, 207 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் இயந்திரம் என 241 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், எஸ்.இனிகோ இருதயராஜ், சீ.கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இதுவரை 2,091 மனுக்கள் பெறப்பட்டு, 1,142 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய 949 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x