வருமான வரித்துறை மறு மதிப்பீடு நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

வருமான வரித்துறை மறு மதிப்பீடு நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

நிலம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் நிலத்தின் மதிப்பு குறித்து காட்டப்பட்ட்டுள்ளதா கூறி, வருமான வரி மறுமதிப்பீட்டிற்காக வருமான வரித்துறையால் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015 ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2014-15, 2015-16ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறுமதிப்பீடு செய்வது தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்து கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

வருமான வரித்துறை, வருமான வரிக் கணக்குகளுக்கான மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் துவங்காத நிலையில், வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது எனவும், வருமான வரித்துறை நோட்டீஸில் தலையிட முடியாது எனவும் கூறி, மனுக்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், சட்டப்படி மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் வருமான வரித்துறை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in