Published : 17 Feb 2016 09:57 AM
Last Updated : 17 Feb 2016 09:57 AM
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்துள்ள நீதிபதிகள், விசாரணையை வரும் பி்ப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்காக போராடிய 12 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, மதுரையில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் குமார் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் மீது கடந்த 16.9.15 அன்று நீதிபதிகள் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் பீட்டர் ரமேஷ் குமார் உள்ளிட்ட 44 வழக்கறிஞர்களை பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்த அவமதிப்பு வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்து பதி்ல் மனு தாக்கல் செய்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கடந்த 16.9.15 அன்று வழக்கறிஞர் பீ்ட்டர் ரமேஷ் குமார் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் சரியான நேரடியாக விளக்கம் தரவில்லை. இதனால் அவர் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, தண்டனை குறித்து கேள்வி எழுப்புவதற்காக விசாரணை வரும் பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் அவர் நேரில் ஆஜராக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT