Published : 05 Jul 2021 01:44 PM
Last Updated : 05 Jul 2021 01:44 PM

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் நா.புவியரசன் இன்று (ஜூலை 05) வெளியிட்ட அறிவிப்பு:

"உள் தமிழகத்தில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக, இன்று சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பிற்பகலில் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

குடவாசல் (திருவாரூர்) 12, பாலவிடுதி (கரூர்), சேலம் , அணைமடுவு அணை (சேலம்) தலா 10, பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), மணப்பாறை (திருச்சி), மங்களபுரம் (நாமக்கல்), மணல்மேடு (மயிலாடுதுறை), கள்ளந்திரி (மதுரை) தலா 9, பெரம்பலூர், கயத்தாறு (தூத்துக்குடி), வானமாதேவி (கடலூர்) தலா 8, பாடலூர் (பெரம்பலூர்), ஹரூர் (தருமபுரி), அரவக்குறிச்சி (கரூர்), முகையூர் (விழுப்புரம்), தலா 7, காங்கேயம் (திருப்பூர்), நாமக்கல், இளையாங்குடி (சிவகங்கை), ஆலங்காயம் (திருப்பத்தூர்) தலா 6.

இன்று மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x