Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM
ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கத்தை நூதனமுறையில் கடத்தி வந்த 6 பேரைசுங்கத் துறையினர் கைது செய்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் முக்கிய நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதால், விமான நிலையத்தில் சுங்கத்துறையினர், வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பயணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று அதிகாலை ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை உஷார்ப்படுத்தினர்.
அதனடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 6 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
அதில், சந்தேகத்துக்குரிய பயணிகள் 6 பேரும், தங்கத்தை பொடியாக்கி பேஸ்ட் போல் மாற்றி, தாங்கள் கொண்டு வந்த பெட்டியில் இருந்த உடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பிரித்து எடையிட்டு பார்த்தனர். அதில் மொத்தம் 7 கிலோ 908 கிராம் தங்கத்தை 6 பேரும் கடத்தி வந்தது தெரிந்தது. கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடி ஆகும்.
அதிகாரிகளின் தொடர் விசாரணையில், தங்கத்தை கடத்தி வந்தவர்கள் விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், வேலூர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஆறுமுகம், அப்துல் ஹமீத், மாதவன், சுலைமான், ராஜேந்திரன், இப்ரா ஹிம் ஷாஆகியோர் எனத் தெரிந்தது. இதையடுத்து மேற்கண்ட 6 பேரையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT