Last Updated : 01 Jul, 2021 07:05 PM

 

Published : 01 Jul 2021 07:05 PM
Last Updated : 01 Jul 2021 07:05 PM

பாளை சிறையிலுள்ள ஆயுள் கைதி அட்டாக்பாண்டியை பரோலில் விடுவிக்கக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை

நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பாளை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் அட்டாக்பாண்டியை பரோலில் விடுதலை செய்யக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் அட்டாக்பாண்டி. இவரை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுக்கு மேலாக பாளை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் உத்தங்குடியில் உள்ள நாளிதழ் அலுவலகத்தில் கடந்த 2007-ல் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக்பாண்டிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை 21.3.2019-ல் உத்தரவிட்டது.

இதனிடையே அட்டாக்பாண்டியை பத்து நாள் பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி தயாள், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், அட்டாக்பாண்டியின் தாயார் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் சுய நினைவு இல்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாயாரை பார்ப்பதற்காக அட்டாக்பாண்டியை 10 நாள் பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அட்டாக்பாண்டிக்கு பரோல் கேட்டு பாளை சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறி சிறைத்துறை கண்காணிப்பாளரின் உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.

அதில், அட்டாக்பாண்டி நாளிதழ் அலுவலத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக பாளை சிறையில் இருந்து வருகிறார். இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அட்டாக்பாண்டி மீது கோ.புதூர் காவல் நிலையத்திலும், சிபிஐடி போலீஸிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் அவருக்கு பரோல் விடுமுறை வழங்க தமிழ்நாடு தண்டனை தள்ளிவைத்தல் விதிகள் படி விடுப்பு வழங்குவதற்கு விதிகளில் இடமில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து மனுதாரரின் கணவருக்கு பரோல் விடுமுறை வழங்கக்கோரி அளித்த மனுவை சிறைத்துறை கண்காணிப்பாளர் நிராகரித்துள்ளார்.

அந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய உரிமை வழங்கப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x