Last Updated : 01 Jul, 2021 04:56 PM

 

Published : 01 Jul 2021 04:56 PM
Last Updated : 01 Jul 2021 04:56 PM

புதுச்சேரி வளர்ச்சிக்கு உதவி: தன்னை சந்தித்த பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்களிடம் பிரதமர் மோடி உறுதி

புதுச்சேரி

பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்து புதுச்சேரி பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உரையாடினர். கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை தர வேண்டும் உள்ளிட்ட முக்கியக்கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்துள்ளனர். அதற்கு புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மோடி உறுதி தந்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. ஏம்பலம் செல்வம் பேரவைத்தலைவராகவும், அமைச்சர்களாக நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோரும் பதவியேற்றுள்ளனர். அதோடு மேலும் 3 பாஜகவினர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற 6 சுயேட்சைகளில் 3 எம்எல்ஏக்களும் பாஜகவை ஆதரிக்கின்றனர். இதனால் புதுவை சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு பாஜக சார்பில் ரெட்டியார்பாளையம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏவாக இடம்பெற்றிருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் பாஜக பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது.

தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்துக்கு பிறகு புதுவையில்தான் ஆட்சியில் பாஜக இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் டெல்லிக்கு பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் புறப்பட்டு சென்றனர். பாஜக அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார், மாநிலத்தலைவர் சாமிநாதன், பேரவைத்தலைவர் செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தனர். அப்போது பிரதமருடன் கலந்துஉரையாடி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

இதுபற்றி பாஜக உயர்தலைவர்கள் தரப்பில் கூறுகையில், " தேர்தலின்போது பெஸ்ட் புதுச்சேரி என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்ததும் பாஜக வெற்றிக்கு பலன் தந்துள்ளது. புதுவையின் வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும். கூடுதல் நிதியை அளிக்க வேண்டும் என கோரினோம். முக்கியமாக புதுச்சேரி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை உடன் தர வேண்டும். பிரதமர் வீடு கட்டம் திட்டத்தில் கூடுதலாக வீடுகள் கட்ட அனுமதி தரவேண்டும். கரோனா கட்டுப்பாட்டில் மத்திய அரசு கூடுதலாக உதவி தேவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை குறிப்பிட்டோம். அதற்கு மத்திய அரசு புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் உறுதி தந்தார். புதுச்சேரி மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் திறம்பட பணியாற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தினார். " என்று குறிப்பிட்டனர்.

புதுச்சேரி பாஜக அமைச்சர்கள், பேரவைத்தலைவர் , எம்எல்ஏக்கள் ஆகியோர் பிரதமருடன் தனித்தனியாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அர்ஜூன்ராம்மெக்வால், அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜி மற்றும் முக்கிய பாஜக நிர்வாகிகள், மத்திய மந்திரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பேரவைத்தலைவர் செல்வம் பிரதமரிடம் அளித்த மனுவில், "புதுச்சேரிக்கு ஒருங்கிணைந்த புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்ட ரூ. 220 கோடி நிதி உதவி தரவேண்டும் " என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிரதமர், தேவையான நிதி உதவியை மத்திய அரசு தர ஆவண செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x