Last Updated : 29 Jun, 2021 04:25 PM

 

Published : 29 Jun 2021 04:25 PM
Last Updated : 29 Jun 2021 04:25 PM

ரூ. 5 கோடி மதிப்புள்ள லேசர் இயந்திரத்துடன் கூடிய சிகிச்சை மையம் புதுச்சேரி ஜிப்மரில் திறப்பு: இனி நவீன கண் சிகிச்சைக்கு வாய்ப்பு

தென்னிந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக ரூ.5 கோடி மதிப்புள்ள லேசர் இயந்திரத்துடன் கூடிய சிகிச்சை மையம் ஜிப்மரில் திறக்கப்பட்டுள்ளது. இனி நவீன கண் சிகிச்சைகளைச் செய்யமுடியும் என்று கண் மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் சுபாஷினி தெரிவித்தார்.

ஜிப்மரின் லேசிக் சிகிச்சை மையத்தை நிறுவன இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் திறந்து வைத்தார். அவருடன் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சகா வினோத் குமார், அத்துறை பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது கண் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சுபாஷினி பேசுகையில், " 'லேசிக்' என்பது கண்ணாடி அணிவதைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படும் அறுவை சிகிச்சை. கண்ணின் கருவிழியை மறுவடிவமைக்கும் ஒரு செயல்முறையாகும். இது மயோபியா (கிட்டப் பார்வை). ஹைபாரோபியா (தூரப் பார்வை) மற்றும் அஸ்டிஜிமாடிசம் போன்ற கண்பார்வைக் குறைபாட்டில் கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தாமல் சீரான பார்வையைப் பெற உதவும் சிகிச்சை முறையாகும்.

இந்த சிகிச்சை இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த சிகிச்சையில் ஒரு சிறப்பு மோட்டார் பொருத்தப்பட்ட பிளேடைப் பயன்படுத்தி கார்னியல் திசுக்களின் மெல்லிய மடல் ஒன்றை உயர்த்தி, எக்ஸைமர் லேசரைப் பயன்படுத்தி கார்னியல் வடிவத்தை மறுவடிவமைப்பது லேசிக் சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சை 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் ஒரு வலியற்ற செயல்முறை ஆகும்.

இந்த லேசர் இயந்திரத்தைப் பெற்ற தென்னிந்தியாவின் இரண்டாவது அரசு மருத்துவமனையாக ஜிப்மர் விளங்குகிறது. ரூபாய் 5 கோடி மதிப்புள்ள இந்த இயந்திரத்தின் மூலம் லேசிக், எபி-லேசிக், பிஆர்கே (ஃபோட்டோரிஃப்ரேக்டீவ் கெரடாடமி), டிரான்ஸ்-பிஆர்கே. கான்டூரா எனப்படும் பல சிகிச்சைகளை இதன் மூலம் செய்ய முடியும். கெரடோகோனஸ் எனப்படும் ஒரு கண் நோய் பாதிப்பைக் குறைக்க கொலாஜன் கிராஸ் லிங்கிங் யூனிட்டை ஜிப்மர் வாங்கியுள்ளது. இந்த அறுவை சிகிச்சைகளுக்குப் பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் ஜிப்மரில் மானியத்துடன் வெறும் பத்தாயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும்" என்று டாக்டர் சுபாஷினி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x