Published : 26 Jun 2021 03:12 AM
Last Updated : 26 Jun 2021 03:12 AM

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையனுக்கு போலீஸ் காவல்

எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களில் நூதன திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஹரியாணா கொள்ளையனை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறிவைத்து கும்பல் ஒன்று நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்தது. இந்த கும்பல், கடந்த 15-ம் தேதியில்இருந்து 18-ம் தேதிக்குள் அடுத்தடுத்து சுமார் ரூ.1 கோடி வரை கொள்ளையடித்தது. இதுதொடர்பாக விசாரிக்க தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் மேற்பார்வையில் தியாகராயநகர் காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரியாணா மாநிலம், பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் (37) என்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ.4.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் கொள்ளை தொடர்பான முழு தகவல்களையும் திரட்டும் வகையில் அமீரை 5 நாள் தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அமீரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து அமீரை போலீஸார் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x