Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM
விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டை வழங்கப்படும் கால அவகாசம், வரும் 26-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் விரும்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டை (ரூ.1000) 29 மையங்களில் 7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சர் உத்தரவு
இந்நிலையில் கடந்த 21-ம் தேதி மாநகர போக்குவரத்துக் கழக மத்தியப் பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கடந்த மாதம் (16.05.2021 முதல் 15.06.2021 வரை) வழங்கப்பட்டுள்ள, விரும்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையை, வரும் ஜுலை மாதம் 15-ம் தேதி வரையில் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்து உத்தரவிட்டார்.
பயணிகள் வேண்டுகோள்
மேலும், இந்த மாதம் வழங்கப்படும் பயண அட்டையின், கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிடுமாறு பல்வேறு தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளை ஏற்று, வரும் 26-ம் தேதி வரையில், வழங்கிட அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், வரும் 26-ம் தேதி வரை இந்த பயண அட்டையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல மாதாந்திர பயண சலுகைச் சீட்டு 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் (16.05.2021 முதல் 15.06.2021 வரை) வழங்கப்பட்டுள்ள இந்த மாதாந்திர பயண சலுகைச் சீட்டை வரும் ஜுலை மாதம் 15-ம் தேதி வரையில் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT