Published : 23 Jun 2021 01:35 PM
Last Updated : 23 Jun 2021 01:35 PM

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம் நிறைவேற்றுக: பேரவையில் திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் (ஜூன் 21) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று (ஜூன் 23) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இன்றைய நாளில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசியும், கேள்வி எழுப்பியும் வருகின்றனர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேசுகையில், "தமிழகத்தில் நேர்மையான, திறமையான அதிகாரிகளைத் தன் சிறப்புச் செயலாளர்களாக நியமித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வைக் காத்து தமிழ் தேசத்தின் தந்தையாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்" எனப் பேசினார்.

இனிகோ இருதயராஜ்: கோப்புப்படம்

மேலும், சிறுபான்மையினரின் நலன் காத்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் எனவும், இனிகோ இருதயராஜ் கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x