Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவார் முதல்வர்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விலக்குபெற்று தருவார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சைதாப்பேட்டை தொகுதியில் ஆலந்தூர் சாலை, ஐந்து விளக்கு பகுதிகளில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் அடைப்புகள், மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழைக்கு முன்பு மாநகரப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை பிரதான குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குவது, கழிவுகளைத் தூர்வார்வது, மழைநீர் வடிகாலை சரிசெய்வது ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த காலங்களில் இப்பணிகள் சரியாக நடைபெறவில்லை.

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர்அகற்றும் வாரியம் சார்பில் 454 இயந்திரங்கள் மூலம் சென்னையில் உள்ள 4,200 கிமீ நீளத்துக்கான பாதாளச் சாக்கடை பிரதான குழாய்களின் அடைப்புகள் மற்றும் கழிவுகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 30-ம் தேதி வரை இப்பணிகள் நடைபெறும்.

இதேபோல், சென்னை மாநகராட்சியில் 2 கிமீ நீளத்துக்கான மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் முடிக்கப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் பணிகள் மழைகாலத்துக்கு முன்புமுடிக்கப்படும்.

18 வயது முதல் 44 வயது பிரிவினருக்கான தடுப்பூசியை வாங்குவதற்கு ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. ஜூன் மாதத்துக்கான 42 லட்சம்தடுப்பூசிகளில் 24 லட்சம் வந்துவிட்டன. மீதமுள்ளவை இம்மாத இறுதிக்குள் வந்துவிடும். அடுத்த மாதத்துக்கு 74 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன. செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களை செயல்படுத்துவதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்.

நீட் தேர்வுக்கான எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமே போதுமானதாக இருக்காது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை வந்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிக்கையுடன் தீர்மானத்தை அனுப்பும்போது வலுவாக இருக்கும். நடிகர் சூர்யா கூறியதுபோல் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து தங்கள் கருத்துகளை மாணவர்கள் இக்குழுவுக்கு அனுப்பலாம்.

நீட் தேர்வுக்கு எதிரான போரில்உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணம் உலகை உலுக்கியது. ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’யை தனது தொகுதியில் 4 ஆண்டுகளாக முதல்வர் நடத்தி வருகிறார். அனிதாவின் தந்தை கொடுத்துள்ள அறிக்கையும் குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்துதமிழகத்துக்கு முதல்வர் கண்டிப்பாக விலக்கு பெற்றுத் தருவார்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x