Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை சென்னையில் மெட்ரோ ரயில் சேவை: இன்று முதல் இயக்கப்படுகிறது

சென்னை: மெட்ரோ ரயில் சேவை காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் அறிவுறுத்தல்படி, மெட்ரோ ரயில்களில் இன்று (ஜூன் 21) முதல் இயக்கப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

மெட்ரோ ரயில் சேவை தொடக்கத்தில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். பின்பு, தேவையின் அடிப்படையில் நேர மாற்றம் செய்யப்படும். மெட்ரோ ரயில் சேவை, உச்ச நேரங்களில் (பீக் ஹவர்) காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.

பயணிகளின் பாதுகாப்புக்காக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படும். மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளின் தனிமனித இடைவெளியை கண்காணிப்பதற்காக தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவதோடு, தனிமனித இடைவெளியை உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x