Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM
தனது தந்தையைப் போலவே நீதிபதி ஆர்.சுப்பையாவும் பலசிறப்புமிக்க முன்மாதிரி தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் புகழாரம் சூட்டினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஆர்.சுப்பையா, பணி ஓய்வு பெற்றதையடுத்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மூத்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி, டி.ராஜா, பி.என்.பிரகாஷ் உள்ளிட்ட சக நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் அட்ஹாக் கமிட்டி தலைவர் ரங்கபாஷ்யம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைவழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் பேசியதாவது: நீதிபதி ஆர்.சுப்பையா தனது தந்தையான மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்னவேல்பாண்டியனைப் போலவே சட்டத்தின் அனைத்து துறைகளையும் அலசி ஆராய்ந்து பல்வேறு சிறப்பு மிக்க முன்மாதிரி தீர்ப்புகளை வழங்கியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், கடந்த 13 ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 63,420 வழக்குகள் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 81,033 வழக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 453 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். எளிமைக்கும், அமைதிக்கும் பெயர் போனவர் நீதிபதி ஆர்.சுப்பையா என்றார்.
நீதிபதி சுப்பையா ஏற்புரை நிகழ்த்தினார். உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT