Last Updated : 19 Jun, 2021 03:13 AM

 

Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

‘நீரா’ பானம் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை உடுமலை தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை

அகில இந்திய அளவில் தென்னை மரங்கள் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தில் இருந்தபோதும், கொப்பரை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தென்னைவளர்ச்சி வாரிய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தென்னையில் இருந்து ‘நீரா' பானம் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற பல ஆண்டுகோரிக்கையின் பலனாக, 2 ஆண்டுகளுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. விவசாயிகள் தனிப்பட்ட முறையில் இறக்குவதை தடுக்கும் வகையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில்கோவை, திருப்பூர், உடுமலை உட்பட தமிழகத்தில் 14 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அரசின் அனுமதியை தொடர்ந்து நிறுவனங்கள் ஆர்வமுடன் உற்பத்தியில் ஈடுபட்டன. ஆனால்,தொடங்கிய வேகத்தில் பல நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு, தற்போதைய நிலையில் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே ‘நீரா' உற்பத்தியில் உள்ளன. இதற்கு அரசின் ஒத்துழைப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்நிலையில், திமுக தேர்தல்அறிக்கையில் ‘நீரா' உற்பத்தியை ஊக்குவிக்கவும், விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. அதனடிப்படையில், துறை ரீதியாகநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து உடுமலைப்பேட்டை உழவர் உற்பத்தியாளர்நிறுவனத்தின் தலைவர் செல்வராஜ் ‘இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "கடந்த ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டதோடு சரி,வேறு எந்த உதவியும் அரசால் அளிக்கப்படவில்லை. தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகள் அடங்கியது ‘நீரா' பானம். ஆனால், ஒருநாள் மட்டுமே அதன் ஆயுள். அடுத்தநாள் கெட்டுவிடும். அதற்குள்ளாகவிற்றாகவேண்டும். இது விவசாயி களுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தது.

உடுமலையில் உற்பத்தியாகும் பானத்தை உடனடியாக விற்பதற்கு தேவையான கட்டமைப்பு இல்லை. அரசு அலுவலகங்கள், உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை இல்லை. தனியார் நிறுவனங்களும் முன்வரவில்லை. அரசின் உதவியும் இல்லாததால், தொடங்கிய வேகத்திலேயே பெரும்பாலான நிறுவனங்கள் ‘நீரா' உற்பத்தியை நிறுத்திவிட்டன.

இந்நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் வேளாண்விற்பனைத் துறை செயலர் முரளிதரன் மூலமாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனமும் தலா 100 மரங்களில் ‘நீரா' எடுக்க முதல்கட்டமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான ஆய்வறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x