Published : 26 Dec 2015 11:58 AM
Last Updated : 26 Dec 2015 11:58 AM

268 குடும்பங்களுக்கு இலவச சமையல் வசதி: திடக்கழிவு மேலாண்மை புரட்சியில் குருடம்பாளையம் ஊராட்சி

கோவை பெரியநாயக்கன்பாளை யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட் பட்ட குருடம்பாளையம் ஊராட்சி யில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஏற்கெனவே திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது இந்த ஊராட்சி.

இந்நிலையில் தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக கோவை மாவட்ட வளர்ச்சித் திட்ட முகமையின் ரூ.40 லட்சம் நிதி உதவி பெற்றும், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியோடும், ‘இயற்கை நமக்கு அளித்ததை மீண்டும் இயற்கைக்கே அளித்தல்’ என்ற பொருள்படும் ‘நிசர்குருணா’ என்ற திட்டத்தின் கீழ் ஓர் அபரிமித சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்த ஊராட்சி.

ஊராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் உணவகங்களில் வீணாகும் உணவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளில் இருந்து உடனடி சமையல் எரிவாயு தயாரித்து நேரடியாக கிராமத்தின் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

பொதுவாக சாண எரிவாயுவில் இருந்து மீத்தேன் உற்பத்தி நடைமுறையில் உள்ளது. இதில் கழிவுகள் மக்கி எரிவாயு தயாரிக்க 60 நாட்கள் தேவை. இதற்கு மாற்றாக மிக விரைவாக உடனடி எரிவாயு தயாரிக்கும் திட்டம் நவீன முறையில் பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பத்தோடு இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, முதலில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் காய்கறிக் கழிவுகள், இயந்திரம் மூலம் நன்கு அரைக்கப்பட்டு 2 டன் அளவுள்ள பெரிய தொட்டிக்குச் செல்கிறது. தொட்டியில் உள்ள கழிவுகள் ‘பைரோலோசிஸ்’ என்ற நொதித்தல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் 60 சென்டிகிரேடு வெப்ப நிலையில் சூடான நீர் ஏர்கம்ப்ரசர் மூலம் தொட்டிக்குள் அனுப்பப்டுகிறது. இதனால் உடனடியாக நொதித்த கழிவுகள் குழாய் வழியாக காற்று புகாமல் கடினமாக வடிவமைக்கப் பட்ட காஸ் டாங்குக்கு மீத்தேன் வாயு செல்கிறது.

இந்த சமையல் எரிவாயு மீண்டும் குழாய் வழியாக அதே பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச சமையல் எரிவாயுக் கூடத்துக்குச் செல்கிறது. இங்குள்ள இரண்டு பர்னர்கள் கொண்ட இருபது காஸ் ஸ்டவ்களில் தேர்வு செய்யபட்ட 268 குடும்பத்தை சேர்ந்த பெண்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இலவசமாக சமைத்து எடுத்துச் செல்லலாம். இத்திட்டம் மூலம் தினமும் 2 டன் உணவுக் கழிவுகள் அரைக்கப்பட்டு 6 சிலிண்டர்கள் அளவுக்கு காஸ் உற்பத்தி செய்து சுமார் 1000 பேர் வரை பயனடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து குருடம்பாளையம் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘எங்களது ஊராட்சி கோவை மாநகரை ஒட்டி மேட்டுப்பாளையம் கோவை தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ளதால் புதிய புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. அதற்கேற்ப நிறைய உணவகங்களும் உள்ளன. இங்கெல்லாம் மீதமாகும் உணவுக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்பட்டு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுப்பதும், நாள்தோறும் இவற்றை அகற்றி தூய்மைப்படுத்துவதும் பெரிய சவாலாகவே இருந்தது. இதற்கு அதிக செலவும், மனித உழைப்பும் தேவைப்பட்டது. இதன் காரண மாகவே இப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மாவட்ட வளர்ச்சி முகமையின் ஒத்துழைப்போடும், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத் தின் தொழில்நுட்ப உதவியோடும் ஏழை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தால் நாள்தோறும் சுமார் ஒரு டன்னுக்கும் மேலாக விவ சாய உரமும் கிடைக்கிறது. 1 டன் உணவுக் கழிவில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 யூனிட் மின்சாரமும் தயாரிக்க முடியும் என இத்திட்ட வல்லுநர்கள் கூறியுள்ள னர். தற்போது அதற்கான முயற்சியும் எடுக்கப்படவுள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x