Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

ரூ.2,000 கரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கல்: மத்திய மண்டலத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அமைச்சர்கள் வழங்கினர்

மத்திய மண்டலத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி 2-வது தவணை ரூ.2,000, 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது.

மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை வழங்கினர்.

திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர், எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் க.பா.அருளரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அரியலூரில்....

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,000 மற்றும் 14 வகையான பொருட்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வழங்கி, பேசும்போது, ‘‘அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2,37,300 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.47.46 கோடி நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் த.ரத்னா முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் வ.சி.கோமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4.71 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணியை அடப்பன்வயலில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கூட்டுறவு இணைப் பதிவாளர் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கும்பகோணத்தில்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 6,70,430 ரேஷன் கார்டுதார்களுக்கு நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியை கும்பகோணம் 22 -வது வார்டில் உள்ள ரேஷன் கடையில் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார். எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம், ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகையில்...

நாகை மாவட்டத்தில் உள்ள 2.10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணியை நாகை நீலாயதாட்சி அம்மன் சன்னதி தெருவில் உள்ள ரேஷன் கடையில் ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ நாகை மாலி, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் தெய்வநாயகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறையில் காவிரிநகர் ரேஷன் கடையில் கரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி எம்.பி ராமலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது. எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆட்சியர் லலிதா நிவாரண நிதி வழங்கினார்.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்டத்தில் 1. 84 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியை துறைமங்கலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கிவைத்தார். ஆட்சியர் ப. வெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் கரோனா நிவாரண நிதி மளிகை தொகுப்பு வழங்கும் பணியை கரூர் படிக்கட்டுத்துறை ரேஷன் கடை அருகே மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். ஆட்சியர் (பொ) எம்.லியாகத் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூரில்...

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3.79 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியை திருவாரூர் ரேஷன் கடையில் எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x