Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்யக் கோரி வழக்கு : உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடத்தப்பட்டு, மே 2-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

கட்சிகள் வழங்கிய சான்றுகள்

இத்தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் இன்னும்இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, அந்தஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல்ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

45 நாட்கள் அவகாசம்

தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர, முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 45 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த அவகாசம் ஜூன் 15-ம் தேதியுடன் முடிகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,எம்எல்ஏக்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு, அவர்களை தங்களது கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.

எனவே இந்த ஆவணங்களை வரும் ஜூன் 15-ம் தேதிக்கு முன்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கோரியுள்ளார்.

தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு வரும் 14-ம் தேதி (நாளை) விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x