Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM
ஊரடங்கு முடிந்த உடனோ, அரசிடம்சிறப்பு அனுமதி பெற்றோ தேமுதிகமாவட்டச் செயலாளர்கள் கூட்டம்விரைவில் நடக்கும் என்று கட்சித்தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 2019மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் போட்டியிட்டபோதும் தேமுதிக வெற்றி பெறவில்லை. இதுபோன்ற தொடர் தோல்விகள், அக்கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் வேறு கட்சிகளுக்கு செல்லஉள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காலம் முடிந்தவுடன் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் முடிந்ததும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம்நடத்துவதாக இருந்தது. கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை. வெகு விரைவில் ஊரடங்குமுடிந்தவுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறோம்.இதில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு கருத்துகளை எடுத்துச் சொல்லலாம்.
தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்தான். தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி என்பதை மாவட்டச் செயலாளர்களிடம் கேட்ட பிறகே முடிவெடுக்கிறோம். அதேபோல தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து கட்சியைஎப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும்கலந்துபேசி, நல்ல முடிவை எடுக்க வேண்டும். தேமுதிகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இதுபோன்ற நேரத்தில் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமைக்கு களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தேமுதிகவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஊரடங்கு முடிந்த உடனோ, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றோ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே, நிர்வாகிகள் உறுதியோடு இருந்து வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT