Published : 07 Jun 2021 06:02 PM
Last Updated : 07 Jun 2021 06:02 PM

கரோனா தடுப்பூசியில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை அளிப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவின்படி, ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிடக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குடும்ப அட்டை வைத்திருக்கும் 2 ஆயிரத்து 596 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு அரசின் 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவியின் முதல் தவணை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குடும்ப அட்டை இல்லாத 8 ஆயிரத்து 493 மூன்றாம் பாலினத்தவருக்காக மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம் மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தடுப்பூசி செலுத்துவதில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x