Last Updated : 03 Jun, 2021 08:24 PM

 

Published : 03 Jun 2021 08:24 PM
Last Updated : 03 Jun 2021 08:24 PM

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு நிவாரணம் வழங்க அரசு பரிசீலிக்கலாம் உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதே நேரத்தில் அந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"தமிழகத்தில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பல்வேறு தரப்பினர் வாழ்வாதாரங்களை இழந்து வருகின்றனர்.

இதனால் கரோனா பணியில் ஈடுபடும் காவல்துறையினர், உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும்.

ஊடகத்துறையினர், தியேட்டர் உரிமையாளர்கள், உடற்பயிற்சி கூட பணியாளர்கள், சலூன், அழகு நிலையம் நடத்துவோர், தனியார் பேருந்துகளின் ஓட்டுனர், நடத்துனர்கள், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள், அமைப்பு மற்றும் அமைப்பசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், நிவாரண நிதி வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இருப்பினும் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக அரசு பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x