Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM
கொடிசியா கரோனா சிகிச்சை மையத்திலிருந்து வீடு திரும்பு வோருக்கு நேற்று முதல் இலவச பேருந்து வசதி தொடங்கியுள்ளது.
கோவை அவிநாசி சாலையில்உள்ள கொடிசியா கரோனா சிகிச்சை மையத்தில் 886 சாதாரணபடுக்கைகள் அமைக்கப்பட்டுள் ளன. இதில், மிதமான பாதிப்புள்ள கரோனா நோயாளிகள் அனுமதிக் கப்பட்டு வருகின்றனர். இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு கரோனா தொற்று தீவிரம் அடைந்து ஆக்சிஜன் தேவைப்படும்போது சிகிச்சை அளிப்பதற்காக 400 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தினந்தோறும் இந்த சிகிச்சை மையத்தில் இருந்து வீடு திரும்புவோருக்கென பேருந்து வசதி நேற்று தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக கோவை மைய வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் கூறும்போது, “முழு ஊரடங்கு காலத்தில் நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப ஏதுவாக கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் உதவியுடன் இரு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஒரு பேருந்து விளாங்குறிச்சி, கணபதி வழியாக காந்திபுரம் பேருந்து நிலையம் வரை செல்லும். மற்றொரு பேருந்து சிங்காநல்லூர் வழியாக உக்கடம் வரை செல்லும். தினமும் காலை ஒருமுறை இந்த இலவச பேருந்துகள் இயக்கப்படும். வரும் 6-ம் தேதி வரை இந்த சேவை பயன்பாட்டில் இருக்கும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT