Last Updated : 31 May, 2021 03:34 PM

 

Published : 31 May 2021 03:34 PM
Last Updated : 31 May 2021 03:34 PM

ஊரடங்கால் மதுரையில் விபத்து, மரணமில்லா மே மாதம்: குற்றச்சம்பவங்களும் வெகுவாகக் குறைந்தன

பொது ஊரடங்கால் மதுரை நகரில் மேமாதம் ஒருவர் கூட விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களும் வெகுவாகக் குறைந்துவிட்டன எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும், வாகனங்களின் பெருக்கத்தால் தினமும் விபத்துக்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மேலூர், திண்டுக்கல், திருமங்கலம் நான்குவழிச் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

விபத்துக்கள் இல்லாத மாதமே கிடையாது என, சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் உயிரிழப்பைக் காண முடிகிறது. அதிகவேகம் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே விபத்துக்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

பெரும்பாலும், நான்கு வழிச் சாலைகளில் அதிகாலையில் நிகழும் மரணங்களுக்கு காரணம் வெகுதூரங்களில் இருந்து ஓய்வின்றி வாகனங்களை இயக்குவதால் ஓட்டுநர்களின் தூக்க கலக்கத்தில் விபத்துக்கள் ஏற்படுகிறது என, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அந்த அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் விபத்து மரணம் இல்லாத மாதமே கிடையாது என்றாலும், பிற மாதங்களை ஒப்பிடும்போது, ஊரடங்கையொட்டி மதுரை நகரில் மே மாதத்தில் விபத்து உயிரிழப்பு ஒன்று கூட நிகழவில்லை என்றும், பிற குற்றச்சம்பவங்களும் குறைந்துள்ள தாகவும் மாநகர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் தரப்பில், மக்கள் நெருக்கடி, குறுகிய சாலை, வாகனப் பெருக்கத்தால் மதுரை நகரில் ஒவ்வொரு மாதமும் 8 முதல் 10 விபத்து மரணங்களும், ஆண்டுக்கு 180 முதல் 200 பேரும் உயிரிழக்கின்றனர்.

கோடை விடுமுறை மாதங்களான ஏப்ரல், ஜூனில் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து அதிகரிப்பால் இரு மாதங்களிலும் சற்று கூடுதலாக விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருக்கும்.

இதற்கிடையில் கடந்த மே மாதம் முதலே இரவு 10 முதல் அதிகாலை 4 மணி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தொடர்ந்து 24ம் தேதி முதல் தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருப்பதால் கடந்த மாதத்தில் ஒருவர் கூட விபத்தில் மரணிக்கவில்லை. பிற குற்றச் செயல்களும் வெகுவாக குறைந்துள்ளன. இதன்படி, 2021 ஏப்ரல் மாதம் விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 39 பேர் காயமடைந்துள்ளனர்.

பைக் திருட்டு சம்பவம் 25, செயின் பறிப்பு 6, கொள்ளை 12 நடந்துள்ளன. மே மாதத்தில் ஒருவர் கூட விபத்தில் இறக்கவில்லை. ஆனால் விபத்தில் 15 பேர் வரை காயமடைந்துள்ளனர். 9 பைக் திருட்டு, 3 செயின் பறிப்பு, 8 கொள்ளை சம்பவமும் நடந்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x