Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM

மயிலாடுதுறை அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை

மயிலாடுதுறையை அடுத்த சேந்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு(33), அச்சகத் தொழிலாளி. அம்மாசி மகன் செல்வம்(36), சுமை தூக்கும் தொழிலாளி. இவர்கள் இருவர் மற்றும் வீராசாமி(52), சரத்குமார்(28), செந்தில்(40), மாற்றுத்திறனாளி சரண்ராஜ்(37) ஆகியோரிடம், புதுச்சேரி சாராயம் என்று கூறி, ஒருவர் கள்ளச் சாராயத்தை நேற்று முன்தினம் விற்பனை செய்துள்ளார். அந்தச் சாராயத்தை 6 பேரும் குடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், பிரபுவின் கண்பார்வை பாதிக்கப்பட்டதால், உடனடியாக அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரபுவை சேர்த்தனர். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால், சற்று நேரத்தில் பிரபு உயிரிழந்தார். நள்ளிரவில் வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

இதற்கிடையே, பிரபுவுடன் சாராயம் குடித்த செல்வம் வயிற்று வலி ஏற்பட்டு, வீட்டிலேயே உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, வீராசாமி, சரத்குமார், சரண்ராஜ், செந்தில் ஆகிய 4 பேரும் அன்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதில், மாற்றுத்திறனாளியான சரண்ராஜ் மட்டும் குணமடைந்து, வீடு திரும்பினார். மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கள்ளச் சாராயத்தை விற்பனை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x