

புதுச்சேரியில் இரண்டாவது நாளாக ஒருநாள் கரோனா தொற்றின் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பின் மொத்த எண்ணிக்கை 1,500-ஐக் கடந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (மே 30) வெளியிட்ட தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 8,437 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 743, காரைக்காலில் 143, ஏனாமில் 24, மாஹேவில் 20 என மொத்தம் 930 (11.02 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 15 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் ஒருவர் என 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,518 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.46 ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 826 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுச்சேரி ஜிப்மரில் 489 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 337 பேரும், கோவிட் கேர் சென்டரில் 427 பேரும் என 1,253 பேரும், காரைக்காலில் 200 பேரும், ஏனாமில் 102 பேரும், மாஹேவில் 80 பேரும் என மருத்துவமனைகளில் 1,635 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 8,371 பேரும், காரைக்காலில் 1,669 பேரும், ஏனாமில் 323 பேரும், மாஹேவில் 169 பேரும் என 10 ஆயிரத்து 532 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 12 ஆயிரத்து 167 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக 1,895 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்து 141 (86.82 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 10 லட்சத்து 43 ஆயிரத்து 130 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 3 ஆயிரத்து 558 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 737 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.