Published : 10 Dec 2015 09:22 AM
Last Updated : 10 Dec 2015 09:22 AM

ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், எஸ்ஐ கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகளூரைச் சேர்ந்தவர் முரளி. இவருக்குச் சொந்தமான லாரி கடந்த அக்டோபர் மாதம் திருடு போனது. இது குறித்து நாட்றம்பள்ளி போலீஸில் முரளி புகார் செய்தார். காவல் ஆய்வாளர் காமராஜ், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், லாரி திருட்டு வழக்கில் தொடர்புடைய 8 பேரில், 6 பேரை நாட்றம்பள்ளி போலீஸார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.அதில், ஒடுக்கத்தூர் அடுத்த ஜார்தான்கொல்லை ஊராட்சித் தலைவர் ராஜசேகர், பொம்மிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜி ஆகியோர் தலை மறைவாகிவிட்டதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், லாரி திருட்டு வழக்கில் தேடப்பட்ட ஊராட்சித் தலைவர் ராஜசேகர், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சேகர் ஆகியோரை சந்தித்து பேசியபோது, ரூ.20 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசப்பட்டது. பேர முடிவில் ராஜசேகர் ரூ.12 லட்சத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சேகரிடம் வழங்கினார்.

இதற்கிடையே, திருடுபோன லாரி ஜமனாமரத்தூர் அருகே மீட்கப்பட்டது. இதை அறிந்த ராஜசேகர், கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டார். அதற்கு காமராஜ் மறுப்பு தெரிவித்தார். இது குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி பாலசுப்பிரமணியத்திடம் ராஜசேகர் புகார் அளித்தார். அதன்பேரில் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தியபோது, ராஜ சேகரிடம் இருந்து ரூ.12 லட்சத்தை காமராஜ் மற்றும் சேகர் ஆகியோர் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, காவல் நிலையத் தில் வைக்கப்பட்ட கணக்கில் வராத பணம் ரூ.11 லட்சத்து 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், 2 பேரையும் கைது செய்து வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று காலை ஆஜர்படுத்தினர். 2 பேரை யும் வரும் 22-ம் தேதி வரை நீதிமன் றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x