Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

திருச்சி பட்டாலியன் பிரிவில் பணிபுரிந்த பெண் எஸ்.ஐ. கரோனா பாதிப்பால் மரணம்: தடுப்பூசி செலுத்திக்கொண்டபோதும் தொற்று ஏற்பட்டதாக தகவல்

மதுரையில் ஏற்கெனவே ஒரு பெண் எஸ்.ஐ. கரோனா பாதிப்பால் மரணமடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் எஸ்.ஐ. தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ராஜேஸ்வரி (45). திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் (பட்டாலியன்) 1-வது பிரிவில்சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இவர்களது மகன் 10-ம் வகுப்பும், மகள் 4-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

ராஜேஸ்வரிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் ஆக்சிஜன் படுக்கை தேவைப்பட்ட நிலையில், சொந்த ஊரான மதுரைக்கு அழைத்து வர குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக அரசரடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகியபோது, ஆக்சிஜன் படுக்கை காலியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு ராஜேஸ்வரி அழைத்து வரப்பட்டார்.

ஆனால், அவர்கள் வருவதற்குள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதையடுத்து, வேறு சில தனியார் மருத்துவமனைகளை குடும்பத்தினர் அணுகினர். எங்கும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை.

இதையடுத்து மதுரை அரசுமருத்துவமனைக்கு ராஜேஸ்வரியை நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியில் ராஜேஸ்வரி உயிரிழந்தார். கடந்த 1997-ல்காவல்துறையில் சேர்ந்த ராஜேஸ்வரி, எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். இவர், தேர்தல் பணிக்காக ஈரோடு சென்று வந்ததற்கு பின்பு, அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு மதுரை 6-வது பட்டாலியன் பிரிவில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்த லட்சுமி என்பவரும் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜேஸ்வரியும், லட்சுமியும் ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தவர்கள். பதவி உயர்வில் இருவரும் திருச்சிக்குச் சென்றனர். லட்சுமி பணி மாறுதல் பெற்று மதுரைக்கு வந்த நிலையில் உயிரிழந்தார். இருவரும் கரோனா தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x