Published : 27 May 2021 03:42 PM
Last Updated : 27 May 2021 03:42 PM

லட்சத்தீவு அதிகாரி பிரபுல் படேலை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை

லட்சத்தீவில் வசிக்கும் மக்களை வாட்டி வதைக்கும் சட்டங்களை போட்டு எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கும் அதிகாரி பிரபுல் படேலை திரும்பப்பெற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

கேரளத்திற்கு மேற்கே, அரபிக் கடலில், 32 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்ட லட்சத்தீவு இருக்கின்றது. மக்கள் தொகை ஒரு லட்சத்திற்குள்தான். அவர்களுள் 99 விழுக்காட்டினர், பட்டியல் இனப் பழங்குடியினர். மதத்தால் இஸ்லாமியர்கள்.

லட்சத்தீவுகளில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது. அந்த மாநில மக்கள், எளிமையான, இயற்கை வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அங்கே மது கிடையாது. குற்ற வழக்குகள் இல்லை. விவசாயம் செய்யும் நிலப்பரப்பு இல்லை என்பதால், மீன்பிடித்தலும், தேங்காய் வணிகமும்தான் முதன்மையான தொழில்.

மாட்டுக்கறிதான் முதன்மை உணவு. பள்ளி மாணவர்களுக்கான பகல் உணவிலும் கூட மாட்டுக்கறியே வழங்கப்பட்டு வந்தது. லட்சத்தீவு, இந்திய ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி. ஆனால், துணைநிலை ஆளுநர் கிடையாது. தலைமைப் பொறுப்பில், (Administrator) தினேஷ் ஷர்மா இருந்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் அவர் இயற்கை எய்தினார். அடுத்து, பிரபுல் பட்டேல் என்பவர் நியமிக்கப்பட்டார்.

அவர் LDAR (Lakshadweep Development Authority Regulations) என்ற சட்டத்தை லட்சத்தீவில் கொண்டு வந்தார். இதன்படி, லட்சத்தீவில் வசிக்கும் எவரையும் எந்தக் காரணமும் கூறாமல், நிலத்தில் இருந்து வெளியேற்றவோ அல்லது மாற்று இடத்தில் வசிக்கவோ உத்தரவிடலாம்.

குற்றம் புரிவோர் இல்லாத லட்சத்தீவில், PASA (Lakdhadweep Anti-Social Activity Regulations) என்ற சட்டத்தின் கீழ், எவரையும் காரணம் எதுவுமே இல்லாமல் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டு வந்தார்.

Draft Panchayat Notification என்ற பெயரில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் ஊர் ஆட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற சட்டமும், Lakshadweep Animal Preservation Regulations என்ற பெயரில் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தின் திரை மறைவில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மாட்டுக்கறி வைத்து இருக்கவோ, பாதுகாக்கவோ, கொண்டு செல்லவோ கூடாது என்ற சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீறினால் மாட்டுக்கறி பறிமுதல் செய்யப்படுவதோடு, கைது செய்யப்பட்டு, 10ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்; 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டும்.

இனி பள்ளிகளில் மாட்டுக்கறி கிடையாது, பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் ஊழியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணி நீக்கம். 38 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகின்றன.

சுற்றுலா என்ற பெயரில் சாராயக்கடைகளைத் திறக்க ஆணை. பொறுப்பு ஏற்ற நான்கே மாதங்களுக்குள் பல சட்டங்களால் அத்தீவின் அமைதி கெட்டுள்ளது. இதை ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சித்தலைவர்கள் பலர் கடுமையாக எதிர்க்கின்றனர்.

லட்சத்தீவு அதிகாரி பிரபுல் படேலை திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுவதும் வலுத்து வருகிறது. தமிழகத்திலும் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிரச்சினைக்குரிய அதிகாரி பிரபுல் பட்டேலை திரும்பப்பெற வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

“#Lakshadweep-இல் பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இஸ்லாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. PMO India தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x