மீண்டும் சோகம்: சத்தியமங்கலம் வனப்பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

மீண்டும் சோகம்: சத்தியமங்கலம் வனப்பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி
Updated on
1 min read

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மின்வேலியில் சிக்கிய ஆண் யானை உயிரிழந்தது. தோட்ட உரிமையாளர் தலைமறைவானார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காராச்சிக்கொரையைச் சேர்ந்தவர் ராஜன் (45). வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார். வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க மின்வேலி அமைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று, ராஜனின் வாழைத் தோட்டத்திற்குள் நுழைய முயன்றது.

அப்போது மின்வேலியில் இருந்து பாய்ந்த உயர் அழுத்த மின்சாரத்தால் யானை உயிரிழந்தது. இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான தோட்ட உரிமையாளர் ராஜனைத் தேடி வருகின்றனர்.

வனப்பகுதிக்கு அருகே உள்ள விளைநிலங்களில், யானைகள் விரும்பி உண்ணக்கூடிய கரும்பு, வாழை போன்ற பயிர்களைப் பயிரிட வேண்டாம் என வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேபோல், மின்வேலியில் விதிகளுக்கு மாறாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சக் கூடாது என்றும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை விவசாயிகள் பின்பற்றாத நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் டி.என்.வனப்பகுதியில் ஒரு யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்த நிலையில், தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியிலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in