Last Updated : 26 May, 2021 03:53 PM

 

Published : 26 May 2021 03:53 PM
Last Updated : 26 May 2021 03:53 PM

புதுச்சேரியில் 1,321 பேருக்கு கரோனா: 27 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிதாக 1,321 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,435 ஆகவும், இறப்பு விகிதம் 1.44 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று(மே.26) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,032 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,030 பேருக்கும், காரைக்காலில் 220 பேருக்கும், ஏனாமில் 53 பேருக்கும், மாஹேவில் 18 பேருக்கும் என மொத்தம் 1,321 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 21 பேரும், காரைக்காலில் 3 பேரும், ஏனாமில் 2 பேரும், மாஹேவில் ஒருவரும் என 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,435 ஆகவும், இறப்பு விகிதம் 1.44 ஆகவும் அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 99 ஆயிரத்து 540 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மருத்துவமனைகளில் 1,851 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,991 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 842 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 1,927 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்து 263 (83.65 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 10 லட்சத்து 6 ஆயிரத்து 495 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் 8 லட்சத்து 76 ஆயிரத்து 459 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 528 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x