அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள், பிஎஃப் கால தவணை கெடு நீட்டிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை

அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள், பிஎஃப் கால தவணை கெடு நீட்டிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை
Updated on
1 min read

அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள், பிஎஃப் கால தவணை கெடு, தண்டத் தொகையை ரத்து செய்தது போன்றவைகளை கடந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் ரத்து செய்தது போல் இந்த ஆண்டும் இரண்டாம் அலை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரத்து செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் எம்.பி, கடிதம் சு.வெங்கடேசன் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள், தண்டத் தொகை ரத்து கால தவணை கெடு நீட்டிப்பு கோரி நான் இன்று நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் இது.

அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் சாமானிய மக்களின் சேமிப்புகள் இவை. இ‌ந்த அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள் (Recurring Deposits (RD), Public Provident Fund (PPF), Suhanya Samriddhi Yojana (SSA)) தவணைகளுக்கு காலக் கெடு உண்டு. அதற்குள் கட்டத் தவறினால் தண்டத் தொகை உண்டு. காலாவதியாகி விடும். அதைப் புதுப்பிப்பதற்கு கட்டணம் உண்டு. இதில் சுகன்யா திட்டம் பெண் குழந்தைகளுக்கானது.

கடந்த ஆண்டு நிதியமைச்சகம் இச் சேமிப்புகளின் தவணையைச் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு தந்தது. தண்டத் தொகையை ரத்து செய்தது. புதுப்பித்தல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்தது. இந்த ஆண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகள் கோவிட் பெரும் தொற்றின் இரண்டாம் அலை பரவலால் ஊரடங்கில் உள்ளன.

ஆகவே கடந்த ஆண்டு எடுத்த அதே முடிவை எடுத்து சிறு சேமிப்புகளுக்கான தவணைக் கெடு நீட்டிப்பு, தண்டத் தொகை ரத்து, புதுப்பித்தல் கட்டணம் தள்ளுபடி ஆகியவற்றை உடன் அறிவிக்க வேண்டும். மத்திய அரசு ஏழை நடுத்தர மக்களின் பாடுகளை உணர்ந்து முடிவெடுக்க வேண்டும்”.
இவ்வாறு சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in