Last Updated : 25 May, 2021 01:40 PM

 

Published : 25 May 2021 01:40 PM
Last Updated : 25 May 2021 01:40 PM

புதுச்சேரியில் 1 லட்சத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு; புதிதாக 1,237 பேருக்குத் தொற்று உறுதி: மேலும் 26 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. புதிதாக 1,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் இன்று (மே 25) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 9,148 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 915 பேருக்கும், காரைக்காலில் 222 பேருக்கும், ஏனாமில் 75 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என, மொத்தம் 1,237 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 23 பேர், காரைக்காலில் 3 பேர் என, 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில், 22 வயது இளைஞர் உட்பட 14 ஆண்கள், 12 பெண்கள் அடங்குவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,408 ஆகவும், இறப்பு விகிதம் 1.43 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. ஏனாம், மாஹேவில் இன்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 98 ஆயிரத்து 219 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தொற்று பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 1,884 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 13,591 பேரும் என, மொத்தம் 15 ஆயிரத்து 475 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 1,571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 81 ஆயிரத்து 336 (82.81 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 9 லட்சத்து 97 ஆயிரத்து 347 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 8 லட்சத்து 69 ஆயிரத்து 700 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 940 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x